புதுடெல்லி,
சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 1999 முதல் 2003-ம் ஆண்டு வரை இருந்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றி இருக்கும் அவர் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். டெல்லி கிரிக்கெட் மேம்பாட்டுக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்.
புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான டெல்லி பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியம் தற்போது நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லி கிரிக்கெட் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட மறைந்த அருண்ஜெட்லியை கவுரவிக்கும் வகையில், டெல்லி பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியத்துக்கு அருண் ஜெட்லியின் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விளையாட்டு மந்திரி கிரண் ரிஜிஜூ உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். அதேநாளில் இந்த ஸ்டேடியத்தின் ஒரு கேலரிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பெயர் சூட்டப்படுகிறது. ஆனால் இந்த மைதான பகுதி தொடர்ந்து டெல்லி பெரோஸ்ஷா கோட்லா என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என்று டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ஆஷிஷ் நெஹரா தெரிவித்துள்ளார்.