கிரிக்கெட்

துலீப் கோப்பை: எம்.எஸ்.தோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த துருவ் ஜூரல்

துலீப் கோப்பை தொடரில் இந்தியா ஏ - இந்தியா பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜூரல் இந்த சாதனையை படைத்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அதில் கடந்த 5-ம் தேதி பெங்களூருவில் தொடங்கிய போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி முதல் இன்னிங்சில் 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷீர் கான் 181 ரன்கள் குவித்தார். இந்தியா ஏ அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி மிகவும் சுமாராக பேட்டிங் செய்து 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 36, கேஎல் ராகுல் 37 ரன்கள் எடுத்தனர். இந்தியா பி சார்பில் அதிகபட்சமாக நவ்தீப் ஷைனி, முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பி அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 184 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 61, சர்பராஸ் கான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதனையடுத்து 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா ஏ அணி தற்போது வரை 124 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த போட்டியின் இந்தியா பி அணியின் 2-வது இன்னிங்சின்போது இந்தியா ஏ அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் 7 கேட்சுகளை பிடித்தார்.

இதன் வாயிலாக துலீப் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற எம்.எஸ். தோனியின் வாழ்நாள் சாதனையை துருவ் ஜூரல் சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2004 - 05 துலீப் கோப்பையில் மத்திய மண்டல அணிக்கு எதிரான போட்டியில் வடக்கு மண்டல அணிக்காக எம்.எஸ். தோனியும் ஒரு இன்னிங்ஸில் 7 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்திருந்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு