மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை நேற்று விளையாடினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபக்கம் ஐதராபாத் பந்துவீச்சாளர்களை தேவ்தத் படிக்கல் துவம்சம் செய்தார். அவர் 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
ஆரம்பம் முதல் சறுக்கிய ஐதராபாத் அணி 29 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பிறகு களமிறங்கிய மார்க்ரம் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி நிலைத்து நின்று விளையாடினர். குறிப்பாக அதிரடி காட்டிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும் இறுதியில் ஐதராபாத் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
நேற்றைய போட்டியின் முக்கிய நிகழ்வாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அமர்ந்திருந்த இடத்தில் சமீபத்தில் மறைந்த ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவானும் ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்னே போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது.
அந்த போஸ்டரில் எப்போதும் முதல் அரசர் என எழுதப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது படம் வைக்கபட்டிருந்தாக அணி நிர்வாகம் தெரிவித்தது.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஷேன் வார்னே ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்து பட்டம் வென்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.