லண்டன்,
இங்கிலாந்தை சேர்ந்த கிளப் கிரிக்கெட் வீரர் சாம் போடோனோ(22), கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக நீண்ட தூரம் ஓடி வந்து பந்துவீசி சாதனை படைத்துள்ளார்.
சர்ரே மாகாணத்தில் கில்ட்போர்டு அருகே உள்ள வார்பிளஸ்டனைச் சேர்ந்தவர் சாம் போடோனோ. இவர் கடந்த சனிக்கிழமை மிக நீண்ட தூரம் ஓடி வந்து பந்துவீசி கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில், லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்துக்கான ஓட்டத்தை தொடங்கினார்.
கிரிக்கெட் வெள்ளைச் சீருடை அணிந்தபடியும், கையில் கிரிக்கெட் பந்தை ஏந்தியபடியும் ஓடிய அவர், சுமார் 14 மணி நேரத்துக்குப் பிறகு மறுநாள் வேலி எண்ட் கிரிக்கெட் கிளப்பை சென்றடைந்தார்.
100 கி.மீ. தூரத்தை நிறைவு செய்த சாம் போடோனோ, வேலி எண்ட் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். அங்கு போட்டியின் முதல் பந்தை வீசியதன் மூலம், கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட தூரம் ஓடி வந்து பந்துவீசியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இருப்பினும், கின்னஸ் உலக சாதனை அமைப்பு இதற்கு இன்னும் அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கவில்லை.
சாதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக சரிபார்த்த பின்னரே சாதனை அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படும். இந்த சரிபார்ப்பு பணிகளுக்கு சுமார் 2 வாரங்கள் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட தூரம் ஓடி வந்து பந்துவீசியதற்கான கின்னஸ் உலக சாதனை தற்போது டாம் டன் வசம் இருந்தது. அவர் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டில், கிழக்கு லண்டனில் உள்ள பெத்னல் கிரீனில் இருந்து தெற்கு லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் காமன் வரை சுமார் 24 கி.மீ. ஓடி, பின்னர் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பந்துவீசி சாதனை படைத்திருந்தார்.
தற்போது சாம் போடோனோ 100 கி.மீ. ஓடி வந்து பந்துவீசியதன் மூலம் டாம் டன்னின் சாதனையை முறியடித்துள்ளார். இருப்பினும், இந்த சாதனைக்கு கின்னஸ் உலக சாதனை அமைப்பு இன்னும் அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கவில்லை என்பதால், அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து அனைவரும் உள்ளனர்.