பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் நடந்து வருகிறது. இதில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 278 ரன்னில் அடங்கியது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. பாகிஸ்தான் அணி 57.4 ஓவர்களில் 232 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபர் அசாம் 68 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை.
வங்காளதேசம் தரப்பில் நஹித் ராணா, தைஜூல் இஸ்லாம் தலா 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காள தேச அணி ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து 156 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தன்ஜித் ஹசன் 4 ரன்னிலும், மக்முதுல் ஹசன் ஜாய் 52 ரன்னிலும், மொமினுல் ஹக் 30 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 13 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.