பார்ல்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் குயின்டான் டி காக் மற்றும் ஜேன்மன் மலான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் மலான் 6 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்தது குயின்டான் டி காக் 27 ரன்களும், மார்க்ராம் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் பவுமாவுடன், வான்டெர் துஸ்சென் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியில் பவுமா மற்றும் துஸ்சென் ஆகியோர் தங்களது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினர்.
பின்னர் பவுமா 110 ரன்கள் எடுத்திருந்தநிலையில் பும்ரா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்ததாக துஸ்செனுடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார்.
முடிவில் அதிரடி காட்டிய வான்டெர் துஸ்சென் 129 (96) ரன்களும், டேவிட் மில்லர் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.