விந்தோக்,
நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி விந்தோக் நகரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோர்டன் ஹெர்மன் அதிகபட்சமாக 126 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நமீபியா களமிறங்கியது. நமீபியா 21.3 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
பின்னர், மழை நின்றதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதன்படி 31 ஓவர்களில் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த நமீபியா 31 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நமீபியாவை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.