திருவனந்தபுரம்,
இந்தியா ஏ - தென்ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 79 ரன்களும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), அக்ஷர் பட்டேல் 60 ரன்களும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), சுப்மான் கில் 46 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க ஏ அணி 45 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ரீஜா ஹென்ரிக்ஸ் (110 ரன்) சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய ஏ அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.