லண்டன்,
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் ஜியோபிரே பாய்காட் (வயது 77). இவர் 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,114 ரன்கள் எடுத்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.
கடந்த ஜூன் 27ந்தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் 10 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் உடல் நலம் தேறி வருகிறார். கிரிக்கெட் போட்டிகளுக்கு கமென்ட்ரி கொடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டி ஆகஸ்டு 1ந்தேதி பிர்மிங்காமில் தொடங்குகிறது.
இதுபற்றி அவரது மகள் எம்மா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், முதல் இரண்டு போட்டிகளிலும் கமென்ட்ரி கொடுக்கும் பணியில் அவர் ஈடுபட இயலாது. நாட்டிங்காமில் தொடங்க உள்ள 3வது போட்டியில் கலந்து கொள்ள கூடும் என அவர் நம்பிக்கை கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.