கிரிக்கெட்

‘கடைசி போட்டி அதுதான்’ - ஓய்வை அறிவித்த 4 முறை ஐபிஎல் கோப்பை வென்ற கர்ண் சர்மா

ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தவர் கரண் சர்மா

லக்னோ,

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் கர்ண் சர்மா (38), அனைத்து வகையான சர்வதேச மற்றும் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் கோப்பை

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத், பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தவர் கரண் சர்மா. 38 வயதான இவர், அதிர்ஷ்டக்காரர் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைக்கப்படுகிறார். இவர் விளையாடிய அணிகளில் சென்னை, மும்பை, ஐதராபாத் அணிகள் ஐபிஎல் கோப்பையை உச்சிமுகர்ந்திருக்கின்றன.

நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த கரண் சர்மா, இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அவர் கடைசியாக 2014 ம் ஆண்டு நவம்பரில் விளையாடியிருந்தார்.

கடைசி ஆட்டம்

இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற உ.பி. டி20 லீக் தொடரில் கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் மற்றும் மீரட் மேவரிக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார் கரண் சர்மா. அதன்படி, 25-ம் தேதி லக்னோவில் நடைபெறும் ஆட்டம்தான் தனது கடைசி ஆட்டம் என்று தெரிவித்துள்ளார்.

அறிமுகப் போட்டியில் சதம்

2007-2008 ஆம் ஆண்டு முதல் தர, லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். ஆரம்பத்தில் அவர் ஒரு ஆல்-ரவுண்டராக இருந்த இவர், ரஞ்சி டிராபி அறிமுகப் போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார்.

இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் தொடருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரோகித் சர்மா 264 ரன்கள் அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் அறிமுகமானார். அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்த கரண் சர்மா, விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

97 முதல் தரப் போட்டிகளில் 270 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டு சதங்கள் மற்றும் 17 அரைசதங்களுடன் 2,866 ரன்கள் எடுத்துள்ளார். 90 ஐபிஎல் போட்டிகளில் 83 விக்கெட்டுகள் உள்பட 191 போட்டிகளில் 168 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி

கிட்டத்தட்ட 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 25-ம் தேதி லக்னோவில் உள்ள மைதானத்தில் கர்ண் சர்மா தனது கடைசி போட்டியில் விளையாட உள்ளார்.