கிரிக்கெட்

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் அறிவிப்பு

டி20 உலக கோப்பை போட்டியில் 5 ரன்களில் பாகிஸ்தானிடம் இலங்கை தோற்றதும் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகினார்.

கொழும்பு

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரரான கிர்ஸ்டன் ஏப்ரல் 15-ந்தேதி முதல் அந்த பொறுப்பை வகித்திடுவார். அவர் இதற்கு முன்பு இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

2011-ம் ஆண்டு ஐ.சி.சி. உலக கோப்பை போட்டியை இந்தியா வென்றபோது, அதனை வழிநடத்தி சென்றவர் என்ற பெருமைக்குரியவர். அதன்பின்னர் 2013-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் தர வரிசையில், தென்ஆப்பிரிக்க அணியை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் முதல் இடத்திற்கு கொண்டு வந்த சாதனை படைத்தவர்.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் 5 ரன்களில் பாகிஸ்தானிடம் இலங்கை தோற்ற நிலையில், முன்னாள் இலங்கை தலைமை பயிற்சியாளரான சனத் ஜெயசூர்யா அந்த பதவியில் இருந்து விலகும் முடிவை மேற்கொண்டார். இந்த சூழலிலேயே, கிர்ஸ்டனின் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.