கிரிக்கெட்

ஐபிஎல் - ஹர்திக் பாண்டியாவை குறிவைத்த சிஎஸ்கே... மும்பை வைத்த அதிரடி நிபந்தனை

ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்க்க பல அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

சென்னை,

ஹர்திக் பாண்டியாவாவை வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

ஹர்திக் பாண்டியாவை குறிவைத்த சிஎஸ்கே

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியை விட்டு வெளியேற உள்ளதாக தெரிகிறது. இதனால் அவரை அணியில் சேர்க்க பல அணிகள் போட்டிப்போடுகின்றன. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் வைத்த நிபந்தனை

அதன்படி, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக சென்னை அணியிடமிருந்து இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே மற்றும் அதிரடி ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோருடன் சேர்த்து ரூ.10 கோடியும் வழங்க வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆயுஷ் மாத்ரே மீது மும்பையின் கவனம்

ஐபிஎல் 2026 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆயுஷ் மாத்ரே, மும்பையை சேர்ந்த உள்ளூர் வீரர் என்பதால் அவரை எப்படியாவது அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் விருப்பம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

சிஎஸ்கே முன்வைத்த மாற்று ஒப்பந்தம்

ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க விரும்பாத நிலையில், அதற்கு மாற்றாக டெவால்ட் பிரெவிஸை அனுப்ப சிஎஸ்கே முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கூடுதாக ரூ.10 கோடி தர முடியாது எனவும் ஹர்திக் பாண்டியாவுடன் எங்களுக்கு மற்றொரு வீரர் வேண்டும் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கேட்க உள்ளதாக தெரிகிறது. அதன்படி, ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து வில் ஜாக்ஸையும் கேட்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை

ஹர்திக் பாண்டியா ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த அனுபவமிக்க ஆல்-ரவுண்டர் ஆவார். இதனால் அவரை அணியில் சேர்க்க பல அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இருப்பினும், ஹார்திக் பாண்டியாவின் டிரேட் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.