துபாய்,
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் நடந்த 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த போட்டியில் 177 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 96 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. இந்த சூழலில் மார்கஸ் ஸ்டோனிசும், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டும் கூட்டணி போட்டு அணியை நிமிர வைத்தனர். கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான 19-வது ஓவரை வீசிய ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சில் மேத்யூ வேட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹசன் அலி கோட்டை விட்டார். இது தான் பாகிஸ்தானுக்கு பாதகமாக மாறியது. அந்த ஓவரில் மேத்யூ வேட் ஹாட்ரிக் சிக்சர் விரட்டியதோடு வெற்றிக்கனியையும் பறித்தார்.
ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மைதானம் முழூவதும் நிரம்பியிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் முதலில் உற்சாகத்துடன் ஆட்டத்தை கண்டுகளித்தாலும், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் ஹசன் அலி விட்ட கேட்சானது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது என்றே சொல்லலாம். இதனால் அந்நாட்டு ரசிகர்கள் ஹசன் அலி மீது கடும் கோபத்தில் உள்ளனர். 17 பந்தில் 41 ரன்கள் எடுத்ததற்காக வேட் ஒரு ஹீரோவாகப் பாராட்டப்பட்டார். மறுபுறம் ஹசன் அலி சமூக வளைதளத்தில் அந்நாட்டு ரசிகர்களால் கடுமையான மீம்ஸ்களுக்கு ஆளானார்.
அத்துடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் அமீரக மண்ணில் தொடர்ச்சியாக 16 ஆட்டங்களில் வெற்றிகண்டிருந்த பாகிஸ்தானின் சாதனை பயணத்துக்கு ஆஸ்திரேலியா நேற்றுடன் முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.