கிரிக்கெட்

"ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்தியது என் பாக்கியம்..." - கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஷாஹிடி பதிவு

கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், ஒருநாள் போட்டிகளில் பேட்டராக தொடர்ந்து அணிக்காக விளையாடவுள்ளதாக ஷாஹிடி தெரிவித்துள்ளார்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வரலாற்று சாதனை

2022-ம் ஆண்டு ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஷாஹிடி, சுமார் நான்கரை ஆண்டுகளாக அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

அவரது தலைமையில், இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது. மேலும், 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணியை அவர் வழிநடத்தினார்.

மிகப்பெரிய பெருமை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். நேர்மை, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புடன் அணியுடன் இணைந்து பணியாற்றியதில் நான் பெருமை கொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய கேப்டன்

கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், ஒருநாள் போட்டிகளில் பேட்டராக தொடர்ந்து அணிக்காக விளையாடவுள்ளதாக ஷாஹிடி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்பாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய கேப்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.