கிரிக்கெட்

“டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மீண்டும் அதிகரிப்பார்” - சூர்யவன்ஷியை புகழ்ந்த ஸ்ரீகாந்த்

ராஜஸ்தான் அணிக்காக வெளிப்படுத்திய அதிரடி ஆட்டமே இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

புதுடெல்லி,

இந்திய இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மீண்டும் அதிகரிப்பார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

எதிர்கால சூப்பர் ஸ்டார்

தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், “சூர்யவன்ஷி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை ஊக்குவிக்க வேண்டும்; ஒருபோதும் மனதைத் தளர செய்யக்கூடாது. அவரை சரியாக வழிநடத்தினால் எதிர்காலத்தின் சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார்.

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் பழைய பெருமையை கொண்டு வருவார். அவர் விளையாடுவதால்தான் அனைவரும் துலீப் டிராபி போட்டிகளைப் பார்க்கிறார்கள். என் மனைவிகூட அவர் விளையாடுவதற்காக போட்டிகளை பார்க்கிறார். எதிர்காலத்தில் உலக கிரிக்கெட்டுக்கு அவர் மிகப்பெரிய சொத்தாக இருப்பார்” என்றார்.

மூன்று வடிவங்களிலும்

மேலும் ஸ்ரீகாந்த் கூறுகையில், “விரைவில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் உலகை ஆளப்போகிறார். சிவப்பு பந்து கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களை தனது விரல் நுனியில் வைத்து விளையாடுகிறார்” என்று பாராட்டினார்.

ஜிம்பாப்வே தொடரில் தொடர் நாயகன்

சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யவன்ஷி 151 ரன்கள் குவித்தார். அவரது சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச ‘தொடர் நாயகன்’ விருதையும் வென்றார்.

ஐ.பி.எல். தொடரில் சாதனை

ஐ.பி.எல். 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டமே இந்திய அணியில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த தொடரில் 237.30 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடிய சூர்யவன்ஷி, ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உள்பட 776 ரன்கள் குவித்தார்.

அள்ளிய விருதுகள்

இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆரஞ்சு தொப்பி, மிகவும் மதிப்புமிக்க வீரர், வளர்ந்து வரும் வீரர், சூப்பர் ஸ்டிரைக்கர், சூப்பர் சிக்சர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் சூர்யவன்ஷி வென்றார்.

SCROLL FOR NEXT