சென்னை,
இந்திய இளம் ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா குறித்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மனம் திறந்து பேசியுள்ளார். அபிஷேக் சர்மாவின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் தான் தான் எனக் கூறிய பாண்டிங், அவரை விட்டது தன்னை மிகவும் வருத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “அபிஷேக் சர்மாவின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் நான் தான் . 17 வயதிலேயே அவர் டெல்லி அணிக்காக களமிறங்கினார். அப்போதே அவருக்குள் ஏதோ ஒன்று ஸ்பெஷலாக இருப்பதை உணர்ந்தேன். அவர் ஒரு ‘ஸ்டார்’ ஆக மாறுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என தெரிவித்தார்.
மேலும் அவர், “அபிஷேக்கை வேறு அணிக்கு டிரேட் செய்ய வேண்டாம் என நிர்வாகத்திடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால் கடைசியில் அவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். அந்த முடிவு எனக்கு இன்னும் வருத்தமாக இருக்கிறது,” என உருக்கமாக கூறினார்.
தற்போது ஐதராபாத் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அபிஷேக் சர்மா, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது வளர்ச்சியைப் பார்த்து, “நான் அப்போதே சொன்னேன்” என்ற பாணியில் பாண்டிங்கின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.