கிரிக்கெட்

இந்தியா - இலங்கை டெஸ்ட் மீண்டும் தொடங்கியது

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

காலே

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், காலே நகரில் நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இந்த போட்டியில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் எடுத்தார். ஆனால் காயம் காரணமாக அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதன்பிறகு கேப்டன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

எனினும், நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடிய தேவ்தத் படிக்கல், 134 பந்துகளில் சதம் விளாசினார். ஆட்டம் மழையால் இடையிடையே பாதிக்கப்பட்டது. இந்தியா 73 ஓவர்களில் 288 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்தபோது, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ரிஷப் பண்ட் 27 ரன்களுடனும், படிக்கல் 131 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனை தொடர்ந்து, இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. ஆனால், காலை 10 மணியளவில் லேசாக தூறல் போட்டது. இதனால், களத்தில் நீர் தேங்காமல் இருப்பதற்காக பாதுகாப்பாக ‘கவர்’ செய்யப்பட்டது. எனினும், அதன் மீது மழை நீர் விழுந்தபடி இருந்தது.

அவ்வப்போது ஊழியர்கள் அதனை பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து, மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால், மழையால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மழை நின்ற பின் நீண்ட நேரத்துக்கு பின் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிதும் ரிஷப் பண்ட் 39 ரன்களில் வெளியேறினார். கேஎல் ராகுல் 82 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து படிக்கல், ஜுரேல் இணைந்து சிறப்பாகி விளையாடி வருகின்றனர்.