மவுன்ட்மாங்கானு,
தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், இந்த தொடரில் நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே எங்கள் எல்லோருக்கும் பெருமிதம் அளிக்கிறது. ரோகித் சர்மா காயத்தால் வெளியேறிய நிலையில் இளம் வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி நெருக்கடியை திறம்பட சமாளித்தனர். வெளியில் இருந்து இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் இதே உத்வேகத்துடன் அணியை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் அணிக்கு 120 சதவீத பங்களிப்பு அவசியம் என்பதை வீரர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அது தான் வெற்றியை அடைவதற்கான வழிமுறையாகும் என்றார்.
நானும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும், ஒரே மாதிரியான மனநிலை, தத்துவம் கொண்டவர்கள். இதே போல் ஒரே மொழியை பேசுகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் சிறந்த கைகளில் இருப்பதாக உணர்கிறேன். இந்த அணியை வழிநடத்த சரியான நபர் வில்லியம்சன் தான் என்றும் கோலி குறிப்பிட்டார்.