புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஆல் ரவுண்டராக செயல்பட்டவர் யூசுப் பதான். கடந்த 2007ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கிய அவர், இந்தியாவுக்காக 57 ஒரு நாள் மற்றும் 22 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி முறையே 810 மற்றும் 236 ரன்களை சேகரித்து உள்ளார்.
ஐ.சி.சி. டி20 உலக கோப்பை 2007 மற்றும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை 2011 ஆகிய இரு உலக கோப்பைகளை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற பெருமையை கொண்டவர்.
இந்நிலையில், டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் என கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் அறிவிப்பினை இன்று வெளியிட்டு உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், என்னுடைய வாழ்க்கையில் கிரிக்கெட்டில் முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் இன்று வந்து விட்டது. கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து நிலைகளில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுகிறேன்.
என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், அணி, பயிற்சியாளர்கள் மற்றும் நாடு முழுமைக்கும் எனக்கு ஆதரவு மற்றும் அன்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். வருங்காலத்திலும் எனக்கு நீங்கள் ஊக்கம் அளிப்பீர்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என அறிவித்து உள்ளார்.