அபுதாபி,
13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 43வது ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடின. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சு தேர்வு செய்த நிலையில், பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர். சந்தீப் சர்மா வீசிய 5வது ஓவரில் மந்தீப் சிங்(17 ரன்கள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல்(20 ரன்கள்) ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து ராஷித் கான் பந்துவீச்சில் கே.எல்.ராகுல்(27 ரன்கள்) பவுல்ட் ஆனார். இதற்கிடையில் க்ளென் மேக்ஸ்வெல்(12 ரன்கள்), தீபக் ஹோடா(0 ரன்கள்), கிறிஸ் ஜோர்டன்(7 ரன்கள்), முருகன் அஸ்வின்(4 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் அணியின் ரன் வேகம் கணிசமாக குறைந்தது.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. நிக்கோலஸ் பூரன்(32 ரன்கள்) மற்றும் ரவி பிஷ்னோய் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 127 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது.
இதில் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினர். வார்னர் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து உள்ளார். அவரது ஆட்டத்தில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் பறந்தன. அவருடன் சேர்ந்து விளையாடிய பேர்ஸ்டோ 19 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின் மணீஷ் பாண்டே (15), அப்துல் சமது (7), விஜய் சங்கர் (26), ஹோல்டர் (5), ரஷீத் கான் (0), சந்தீப் சர்மா (0), கார்க் (3) மற்றும் அகமது (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அந்த அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களே எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.