கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்கு

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.

ராய்ப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது.

இதனிடையே மழை காரணமாக இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் போட்டி தொடங்கியநிலையில், டாஸ் வென்ற பெங்களுரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.

கொல்கத்தா அணியின் சார்பில் கேப்ரன் ரகானே மற்றும் பின் ஆலன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பின் ஆலன் 18 (8) ரன்களும், ரகானே 19 (13) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ரகுவன்ஷியுடன், கிரீன் ஜோடி சேர்ந்தார். விரைவாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் கிரீன் 32 (24) ரன்களில் போல்ட் ஆனார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரகுவன்ஷி 32 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தநிலையில், அவர்கள் இருவரும் காட்டிய அதிரடியால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது.

இறுதியில் ரிங்கு சிங் 49 (29) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சலாம் தார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய உள்ளது.