அபுதாபி,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணி, கொல்கத்தா அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி (5) , டி வில்லியர்ஸ் (0) மேக்ஸ்வெல் (10) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
பின்வரிசை வீரர்களும் சரியாக ஆடாத காரணத்தினால், அந்த அணியால் 100 ரன்களை கூட தாண்ட முடியவில்லை. பெங்களூரு அணியின் ஒரு பேட்ஸ்மேன் கூட தனது அணியை சரிவில் இருந்து மீட்க முடியவில்லை. 19 ஓவர்கள் தாக்குப்பிடித்த பெங்களூரு அணி 92 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பெங்களுரு அணியின் சார்பில் அதிகபட்சமாக தேவ்தத் பட்டிக்கல் 22 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சீரான வேகத்தில் ரன் ரேட்டை உயர்த்திய இந்த ஜோடியில் அரை சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 48 (34) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸலுடன் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் ஆட்டநேர முடிவில் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 41 (27) ரன்களும், ஆண்ட்ரே ரஸ்ஸ ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 10 ஒவர்களில் 1 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.