அபுதாபி,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணியின் சார்பில் சாம் கர்ரன் மற்றும் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த ஜோடியில் டூ பிளஸ்சிஸ் 10(9) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷேன் வாட்சன் 8(3) ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சாம் கர்ரன் 22(25) ரன்களும், அம்பத்தி ராயுடு 13(19) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கேப்டன் டோனியுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடியில் டோனி 28(28) ரன்களில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் கேதர் ஜாதவ் 4(7) ரன்களும், ஜடேஜா 35(30) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் தேவாட்டியா, ஜோப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி மற்றும் கோபால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது