பெங்களூர்,
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 39-வது லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பெங்களூர் அணியின் சார்பில் பர்தீவ் பட்டேல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் விராட் கோலி 9(8) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய டி வில்லியர்ஸ் 25(19) ரன்களும், அக்ஷ்தீப் நாத் 24(20) ரன்களும் எடுத்து வெளியேறினர். சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய பர்தீவ் பட்டேல் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த நிலையில் 53(37) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து ஸ்டோய்னிஸ் 14(13) ரன்களும், பவன் நெகி 5(6) ரன்களும், அதிரடி காட்டிய மொயின் அலி 26(16) ரன்களும் எடுத்து வெளியேறினர்.
இறுதியில் உமேஷ் யாதவ் 1(1) ரன்னிலும், ஸ்டெயின் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்தது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக பர்தீவ் பட்டேல் 53(37) ரன்களும், மொயின் அலி 26(16) ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தாஹிர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன், டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் வாட்சனை 5(3) ரன்னிலும், அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவை (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்டெயின் தனது வேகத்தில் வெளியேற்றினார். அடுத்ததாக டூ பிளஸ்சிஸ் 5(15) ரன்னிலும், கேதர் ஜாதவ் 9(9) ரன்னிலும் வெளியேறினர். அடுத்ததாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அம்பத்தி ராயுடு 29(29) ரன்களும், ஜடேஜா 11(12) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டோனி 35 பந்துகளில் தனது அரை சத்தினை பதிவு செய்தார். அடுத்ததாக பிராவோ 5(4) கேட்ச் ஆகி வெளியேறினார்.
இறுதியில் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தாகூர் ரன் அவுட் ஆக, அதிரடி காட்டிய டோனி 84(48) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் சென்னை அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டெயின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாஹல், சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.