கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா- பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆடி நல்ல தொடக்கம் அமைத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 11.5 ஓவர்களில் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 69 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 2-வது ஜோடி என்ற சாதனையை கிறிஸ் கெயில் - கே.எல்.ராகுலிடம் இருந்து பிரம்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் ஆர்யா ஜோடி தட்டிப்பறித்துள்ளனர்.
அந்த பட்டியல்:
1. விருத்திமான் சஹா - மனோன் வோரா - 129 ரன்கள்
2. பிரப்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் ஆர்யா - 120 ரன்கள்
3. கிறிஸ் கெயில் - கே.எல்.ராகுல் - 116 ரன்கள்
4. மயங்க் அகர்வால் - 115 ரன்கள்
5. கிறிஸ் கெயில் - மந்தீப் சிங் - 100 ரன்கள்
தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை பலமாக கொட்டியதால் மைதானத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. மழை நீடித்ததால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 11 மணியளவில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.