கொழும்பு,
இலங்கைக்கு எதிராக கொழும்பில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் 17-வது ஓவரின் கடைசி பந்தில் அசிதா பெர்னாண்டோ வீசிய பந்தை ஆப் சைடில் அடிக்க முயன்ற ஜெய்ஸ்வால், போல்டாகி ஆட்டமிழந்தார். அதற்கு முன்பு அதே ஓவரில் பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசியிருந்தார்.
ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்திய பெர்னாண்டோ, அதை உற்சாகமாகக் கொண்டாடினார். இதையடுத்து, இருவரும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 24 மாதங்களில் இருவரும் எந்த விதிமீறலிலும் ஈடுபடாத நிலையில், இது அவர்களுக்கு விதிக்கப்பட்ட முதல் அபராதமாகும்.
தற்போது போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளநிலையில், இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 475 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜூரெல் (95) மற்றும் சிராஜ்(0) களத்தில் உள்ளனர்.