டுப்லின்,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டில் இன்று நடைபெற்று வருகிறது. பெல்பாஸ்ட் நகரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் கர்டிஸ் கேம்பர்
அதிகபட்சமாக 96 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கி விளையாடி வருகிறது.