Image Courtesy: @IPL / @PunjabKingsIPL 
கிரிக்கெட்

2010-ல் மிரட்டிய தோனி போல.... - பஞ்சாப் வீரரை பாராட்டிய மேத்யூ ஹைடன்

லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங் 91 ரன்கள் எடுத்தார்.

தர்மசாலா,

ஐ.பி.எல். தொடரில் தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் பிரப்சிம்ரன் சிங் 91 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 37 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பிரப்சிம்ரன் சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டியில் அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங் இந்த வருடம் 11 போட்டிகளில் 437 ரன்கள் அடித்துள்ளார். 24 வயதாகும் அவர் சமீப காலங்களாகவே பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் சி.எஸ்.கே அணிகளின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன், பிரப்சிம்ரன் சிங் விளையாடுவதை பார்ப்பதற்கு 2010-ம் ஆண்டு தோனி விளையாடுவதை பார்த்தது போலவே இருக்கிறது எனவும், இந்த இளம் வீரரின் அதிரடிக்கு முக்கிய காரணங்கள் என்னவென்றும் விளக்கி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கறியதாவது,

இவரிடம் (பிரப்சிம்ரன் சிங்) சிறந்த பவர் இருக்கிறது. 2010-ல் இளம் எம்.எஸ்.தோனி, நாளின் இறுதி ஓவரின் பந்துகளை சிக்ஸர்களாக பறக்க விட்டார். பிரப்சிம்ரன் அதே போன்ற பண்புகளைக் கொண்டுள்ளார். அவரிடம் அற்புதமான பேட்டை சுழற்றும் வேகம், திடமான பேஸ் (அடிப்படை) இருக்கிறது. அவர் அந்தளவுக்கு உயரமானவர் கிடையாது.

அதனால் அவர் பயமின்றி இடைவெளிகளைப் பார்த்து பந்தை அடிக்கிறார். லக்னோ பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை அவர் எடுத்து அடுத்த விதத்தைப் பாருங்கள். அது முழுமையாக அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. கச்சிதமாக விளையாடிய விதத்தால் அவர் எதிரணி பவுலர்களைத் தவறு செய்ய வைத்தார். இவ்வாறு அவர் கூறினார்.