புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 278 ரன்கள் குவித்தது.
ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக கிளாசென் 105 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 110 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடி சதம் விளாசிய கிளாசெனுக்கு (37 பந்துகளில் சதம்) ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஏற்கனவே சொன்னது போல அணி உரிமையாளர் நிறைய பணத்தை முதலீடு செய்துள்ளார்கள். அவர்கள் 12-13 வருடங்களாக இங்கே இருக்கிறார்கள். கடந்த 3 போட்டியில் நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம்.
இடையே எங்களுடைய அணி உரிமையாளர் அற்புதமான விடுமுறை கொடுத்தார்கள், அதற்காக அவர்களுக்கு நன்றி. இது போன்ற பிட்ச்சில் என்னுடைய சாதாரணமான திட்டம் என்னவெனில் நேரான பவுண்டரிகள் சிறியதாக இருக்கும். மற்ற பவுண்டரிகள் 50 - 60 மீட்டர் தொலைவில் இருக்கும். எனவே, நான் பீல்டர்களை நோக்கி அடிக்காமல் அதிகம் நேராக அடிக்க முயற்சி செய்கிறேன். லென்த்களை சரியாக எடுத்து அடிப்பதற்காக நான் நிறைய வேலை செய்துள்ளேன்.
வலைப்பயிற்சியில் நிறைய நேரங்களை செலவிட்டுள்ளேன். இன்று நான் விரும்பிய இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக 5, 6, 7-வது ஓவர்கள் முடிந்த பின் பேட்டிங் செய்ய வருவேன். அங்கே சில நேரங்களில் அதிரடி வேலை செய்யும், சில நேரங்களில் செய்வதில்லை. எப்படியிருந்தாலும் நான் நன்றாக விளையாடாமல் இருப்பதற்காக உரிமையாளர்கள் பணம் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.