மும்பை,
ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் மார்ஷ்-க்கு இன்று காலை நடந்த கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அவருக்கு தலைவலி மற்றும் லேசான காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து, புனே புறப்பட தயாராக இருந்த டெல்லி அணியை நிறுத்தி வைக்கும்படி அணி நிர்வாகத்திற்கு பி.சி.சி.ஐ. அறிவுறுத்தல் வழங்கியது. மற்றோர் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டு அதன் முடிவு வரும்வரை காத்திருக்கும்படி கூறி இருந்தது.
அவருக்கு முன் டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹார்டுக்கு கடந்த வெள்ளி கிழமை கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.
அதற்கு அடுத்த நாள், அணியில் வீரர்களுக்கு மசாஜ் அளிக்கும் தெரபிஸ்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான சூழலில், டெல்லி அணி வீரர்களின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடைசியாக தற்போது எடுக்கப்பட்ட ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் மிச்சேல் மார்ஷ் மற்றும் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹார்டுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இருவருக்கும் பரிசோதனை முடிவில் கொரோனா "நெகடிவ்" என வந்துள்ளதால் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி விளையாட இருப்பதில் எந்த தடையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக டெல்லி அணி வீரர்கள் நாளை புனே புறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.