கிரிக்கெட்

பெங்களூரு மைதானத்தில் ரசிகர்களிடம் செல்போன் திருடப்பட்ட சம்பவம்- சிறுவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது

போட்டி முடிந்ததும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்மநபர்கள் ரசிகர்களின் செல்போன்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

கப்பன் பூங்கா,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 28-ந்தேதி தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் பெங்களூரு-ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தில் குவிந்தனர். இந்த நிலையில் போட்டி முடிந்ததும் ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

மொத்தம் 21 பேரின் செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதனால் செல்போன்களை இழந்தவர்கள், கப்பன் பூங்கா போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன்களை திருடியதாக 4 பேரை கப்பன் பூங்கா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலம் தின்பாகர் அருகே பாபுபூர் பகுதியை சேர்ந்த சுபன் குமார் (வயது 26) என்பதும், மற்ற 3 பேரும் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 21 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் உரிமையாளர்களிடம் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் ஒப்படைத்தார்.

SCROLL FOR NEXT