ராஞ்சி,
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.
2007ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற நிலையில் தற்போது 17 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதனை தொடர்ந்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோனி வெளியிட்டுள்ள நெகிழ்ச்சி பதிவில், 2024ம் ஆண்டின் உலகக்கோப்பை சாம்பியன்கள். எனது இதயத்துடிப்பு அதிகரித்தது. ஆனாலும், இக்கட்டான சூழ்நிலையில் அமைதியாக இருந்து தன்னம்பிக்கையுடன் நீங்கள் செய்ததை செய்வது மிகவும் சிறப்பானது. நாட்டில் உள்ள இந்தியர்களுக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியர்கள் சார்பாகவும் உலகக்கோப்பையை நாட்டிற்கு மீண்டும் கொண்டுவந்ததற்கு வாழ்த்துகள். எனது பிறந்தநாள் பரிசாக விலைமதிப்பற்ற பரிசு அளித்ததற்கு நன்றி
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram