கிரிக்கெட்

நேபாளம்: புதிய கிரிக்கெட் கேப்டனாக சந்தீப் லமிச்சானே நியமனம்

ஏசிசி ஆண்கள் பிரீமியர் கோப்பைக்கான போட்டி தொடரில் அணியை அவர் வழிநடத்துவார்.

காத்மண்டு

நேபாளத்தின் ஒரு நாள் போட்டி தொடருக்கான புதிய கேப்டனாக சந்தீப் லமிச்சானே நியமிக்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் ஒரு நாள் போட்டி தொடருக்கான கேப்டனாக ரோஹித் பவுடல் இருந்து வருகிறார். சுழற்பந்து வீச்சாளரான அவருக்கு பதிலாக, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டி தொடருக்கான புதிய கேப்டனாக சந்தீப் லமிச்சானே (வயது 26) நியமிக்கப்பட்டுள்ளார்.

142 விக்கெட்டுகள்

இதனை நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான லமிச்சானே நேபாளத்திற்காக இதுவரை 78 போட்டிகளில் விளையாடி, 142 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அடுத்து நடைபெற உள்ள ஏசிசி ஆண்கள் பிரீமியர் கோப்பைக்கான போட்டி தொடரில் அணியை அவர் வழிநடத்துவார் என்று தகவல் தெரிவிக்கின்றது. 2022-ம் ஆண்டு செப்டம்பரில், இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக லமிச்சானே கைது செய்யப்பட்டார்.

சிறை தண்டனை

அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீடு தொடர்ச்சியாக அவர் விடுவிக்கப்பட்டார். அணியிலும் சேர்க்கப்பட்டார். இதற்கு சக வீரர்களில் சிலர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.