கிரிக்கெட்

உலகக் கோப்பையில் இடமில்லை: இன்னும் ஒரு போட்டி தான்...ஓய்வு பெறுகிறார் ரோகித் சர்மா

ரோகித் சர்மாவின் 2027 ஒருநாள் உலகக் கோப்பை கனவு நனவாகாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நீண்ட காலமாக அணிக்காக விளையாடி வரும் ரோகித் சர்மாவின் 2027 ஒருநாள் உலகக் கோப்பை கனவு நனவாகாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி

2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பிறகு, 2027 உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுத் தர வேண்டும் என்ற இலக்குடன் ரோகித் சர்மா தீவிரமாக தயாராகி வந்தார்.இதற்காக அவர் உடல் எடையையும் குறைத்து, சிறந்த உடற்தகுதியை எட்டியிருந்தார்.

கடைசி சர்வதேச போட்டி

இந்த நிலையில், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியே இந்திய அணிக்காக ரோகித் சர்மா விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

2027 உலகக் கோப்பை

மேலும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழுவின் 2027 உலகக் கோப்பை திட்டங்களில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை என்றும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு அணியில் அதிக வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

ரோகித் சர்மா அதிருப்தி

இந்திய அணியின் 2027 உலகக் கோப்பை திட்டங்களில் தாம் இடம்பெறமாட்டோம் என்று தேர்வுக்குழு தெரிவித்ததை அடுத்து, ரோகித் சர்மா அதிருப்தியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்வுக்குழுவின் இந்த முடிவால் ஏமாற்றமடைந்த ரோகித் சர்மா, தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரின் போது பிசிசிஐ-யின் சில உயரதிகாரிகளுடனும் இது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

எனினும், அந்த பேச்சுவார்த்தைக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும், இதனால் ரோகித் மேலும் அதிருப்தியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியுடன் அவர் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.