கிரிக்கெட்

சிக்சர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு ப.சிதம்பரம் பாராட்டு

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளுக்கு 97 ரன்களை வைபவ் சூர்யவன்ஷி விளாசினார்.

சென்னை,

பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் தற்போது தொடங்கி உள்ள வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால்-சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி, 16 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் அவர் சிதறடித்தார். பேட் கம்மின்ஸ் வீசிய 3-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். மேலும், ஒரு ஐ.பி.எல். சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை (59 சிக்ஸர்கள்) சூர்யவன்ஷி இன்று முறியடித்துள்ளார். சூர்யவன்ஷியின் அதிரடியால் ராஜஸ்தான் அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் 4 ஆட்டங்களில் 10-க்கும் சிக்ஸர்களை சூர்யவன்ஷி அடித்துள்ளார். இதன் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை சூர்யவன்ஷி இன்று சமன் செய்துள்ளார். அதோடு ஒரு ஐ.பி.எல். இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்தியர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி(12 சிக்ஸர்கள்) படைத்துள்ளார்.

தொடர்ந்து 100 ரன்களை நோக்கி சூர்யவன்ஷி முன்னேறினார். ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு கிறிஸ் கெயில் (30 பந்துகள்) சொந்தக்காரராக இருந்து வருகிறார். இந்நிலையில், சூர்யவன்ஷி 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தார். கிறிஸ் கெயிலின் சாதனையை சூர்யவன்ஷி முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபுல் ஹின்ஜ் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் சாதனை படைக்கும் வாய்ப்பை சூர்யவன்ஷி நூலிழையில் தவறவிட்டார்.

இந்நிலையில் சதத்தை தவறவிட்டாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக வைபவ் சூர்யவன்ஷிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் மீண்டும் சதத்தை தவறவிட்டார். வருத்தமளிக்கும் விதமாகத் தவறவிட்டாலும், அவரது இந்த அற்புதமான ஆட்டம் என்றும் நினைவில் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT