இஸ்லாமாபாத்,
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக அஜ்மல் தெரிவித்துள்ளார். 40 வயதான அஜ்மல், 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஜ்மல் 184 விக்கெட்டுகளையும், 64 - இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
உலக அரங்கில் முன்னணி சுழல் பந்து வீச்சாளராக அஜ்மல் வலம் வந்தாலும் இருமுறை விதிகளுக்கு மாறாக பந்து வீசுவதாக சர்ச்சையில் சிக்கினார். இந்த சர்ச்சைகளை கடந்து வந்த போதிலும், அஜ்மல், விக்கெட்டுகளை கைப்பற்ற போராடினார். ஓய்வு குறித்த அறிவிப்பை ஏ.எப்.பி செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ள அஜ்மல், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முழு திருப்தியுடன் முடித்துக்கொள்வதாகவும், நான் நிர்ணயித்து இருந்த இலக்குகளை எட்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.