கொழும்பு,
இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், வெளிநாடு மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
கொழும்பில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் இந்த மைல்கல்லை எட்டினார்.
வெளிநாடு மற்றும் நடுநில மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பண்ட் இதுவரை 41.68 சராசரியுடன் 2,501 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் 2,496 ரன்கள் எடுத்திருந்த எம்.எஸ். தோனியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார வீசிய ஷார்ட்-பிட்ச் பந்து ரிஷப் பண்ட்டின் இடது கையில் பலமாகத் தாக்கியது. இதனால் கடும் வலியால் அவதிப்பட்ட அவர், 15 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 'ரெட்டையர்ட் ஹர்ட்' முறையில் களத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், 2-வது நாள் ஆட்டத்தில் சரண்ஷ் ஜெயின் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து பண்ட் மீண்டும் களமிறங்கினார்.
இலங்கை பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஷார்ட்-பிட்ச் பந்துகளை வீசி அவருக்கு சவால் அளித்தனர்.
இருப்பினும் துருவ் ஜுரெலுடன் இணைந்து சிறப்பாக விளையாடிய பண்ட், 63 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் இன்னிங்ஸை வலுப்படுத்தினார்.
தற்போது போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளநிலையில், இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 475 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜுரெல்(95) மற்றும் சிராஜ்(0) களத்தில் உள்ளனர்.