கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு

ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களையும் கொரோனா வைரஸ் பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச்செய்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை மும்பையில் மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மராட்டிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளி வரும் நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.