கிரிக்கெட்

வாகனம் ஓட்டிகளின் விழிப்புணர்வுக்கு விராட் கோலி ஆட்டமிழந்த நிகழ்வை சுட்டி காட்டிய போலீசார்

விராட் கோலி ஆட்டமிழந்த நிகழ்வை வாகனம் ஓட்டிகளின் விழிப்புணர்வுக்கான எடுத்துக்காட்டாக உத்தரகாண்ட் போலீஸ் சுட்டி காட்டியுள்ளது.

ஆமதாபாத்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த 5 ஆட்டங்களும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கினர். எனினும், அவர்கள் முறையே 4, 1 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அடுத்து வந்த கேப்டன் கோலி ரன்களை விரைவாக குவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

போட்டியின் 3வது ஓவரில் அடில் ரஷீத் வீசிய பந்தில் கிறிஸ் ஜோர்டானிடம் கேட்ச் கொடுத்து கோலி வெளியேறினார். அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால், இந்தியா 3 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்நிலையில், உத்தரகாண்ட் காவல் துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ள செய்தியில், ஹெல்மெட் அணிவது போதியது இல்லை! வாகனம் ஓட்டும்பொழுது முழு கவனம் தேவை.

அப்படி இல்லையென்றால், கோலி போன்று நீங்கள் பூஜ்யம் ஆகி வெளியேறி விடுவீர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 124 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சேசிங் செய்து விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் (49), பட்லர் (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்பின்னர் மலான் (24) மற்றும் பெயர்ஸ்டோ (26) ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்ட செய்தனர். இங்கிலாந்து 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.