கிரிக்கெட்

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் பதக்கத்தை உறுதி செய்த பிரீத்தி, பிரியா

பெண்களுக்கான குத்துச்சண்டை கால்இறுதியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

கிளாஸ்கோ,

காமன்வெல்த் விளையாட்டில் நேற்று பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை நிருபமா தேவி ஏமாற்றம் அளித்தார். 63 கிலோ எடைபிரிவில் ஸ்னாச் முறையில் 93 கிலோ தூக்கிய அவர் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 123 கிலோ எடையை அவரால் தூக்க முடியவில்லை. மூன்று முயற்சியிலும் சோபிக்கவில்லை.

இதனால் பந்தயத்தை நிறைவு செய்யாமலேயே வெளியேற நேரிட்டது. 25 வயதான நிருபமா கடந்த ஆண்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 217 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஹரி நடராஜ்

ஆண்களுக்கான நீச்சலில் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் ஸ்ரீஹரி நடராஜ் 55.58 வினாடிகளில் தனது பிரிவில் 4-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் 24.94 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மொத்தத்தில் 28-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தார்.

தமிழக வீரர்

தடகளத்தில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் விஷால், தகுதி சுற்றில் 46.49 வினாடிகளில் இலக்கை கடந்து அரைஇறுதியை எட்டினார். 47.43 வினாடிகளில் ஓடி வந்த மற்றொரு தமிழக வீரர் ராஜேஷ் ரமேஷ் தகுதி சுற்றோடு நடையை கட்டினார்.

பிரியா கங்காஸ்

பெண்களுக்கான குத்துச்சண்டை கால்இறுதியில் (54 கிலோ) இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தின் நிகோல் கிளைட்டை துவம்சம் செய்து அரைஇறுதிக்குள் நுழைந்ததுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். மற்றொரு கால்இறுதியில் ஆசிய சாம்பியனான இந்தியாவின் பிரியா கங்காஸ் (60 கிலோ), ஸ்காட்லாந்தின் நியாம் மிட்செலை 4-1 என்ற கணக்கில் போராடி வீழ்த்தி அரைஇறுதியை எட்டியதுடன், குறைந்தது வெண்கலத்தை உறுதி செய்தார்.