கிரிக்கெட்

ரஞ்சி டிராபி; அஜித் ராம் அபார பந்துவீச்சு... சண்டிகர் 204 ரன்களில் ஆல் அவுட்

தமிழகம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஜித் ராம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சேலம்,

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் டி-யில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது 6வது லீக் சண்டிகரை எதிர் கொண்டு ஆடி வருகிறது. இந்த போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தமிழகம் முதல் நாள் முடிவில் தனது முதல் இன்னிங்சில் 89.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 301 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 106 ரன்கள் எடுத்தார். சண்டிகர் தரப்பில் விஷ்ணு காஷ்யப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நேற்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் சண்டிகர் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

சண்டிகர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிவம் பாம்ப்ரி மற்றும் துஷார் ஜோஷ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஷிவம் பாம்ப்ரி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதில் துஷார் ஜோஷி ரன் எடுக்காமலும், மனன் வோரா 34 ரன்னிலும், குனால் மஹாஜன் 30 ரன்னிலும், அன்கித் கவுசிக் 2 ரன்னிலும், மயன்க் சித்து ரன் எடுக்காமலும், ஜக்தீத் சிங் 14 ரன்னிலும், விஷ்னு காஷ்யப் 7 ரன்னிலும், ரோகித், அபிஷேக் சைனி இருவரும் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஷிவம் பாம்ப்ரி சதம் அடித்து அசத்தினார். அவர் 108 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் சண்டிகர் தனது முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஜித் ராம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் 97 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழகம் நேற்றைய 2வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் தமிழகம் 124 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தமிழகம் தரப்பில் அஜித் ராம் 1 ரன்னுடனும், ஜெகதீசன் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.