கிரிக்கெட்

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் - ‘அவர் மிகவும் பொருத்தமானவர்’... அர்சிபி முன்னாள் வீரரை சொன்ன மேத்யூ ஹைடன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் விலகினார்.

சென்னை,

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான மேத்யூ ஹைடன், சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு தினேஷ் கார்த்திக் சிறந்த தேர்வாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

பதவி விலகிய பிளெமிங்

ஐ.பி.எல். வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் விலகினார்.

அடுத்த பயிற்சியாளர் யார்?

பிளெமிங் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் சிஎஸ்கே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த பதவிக்கு மகேந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹேமங் பதானி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், புதிய தலைமைப் பயிற்சியாளர் குறித்து சிஎஸ்கே நிர்வாகம் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

தினேஷ் கார்த்திக்

இந்நிலையில், சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அர்சிபி அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பொருத்தமாக இருப்பார் என்று மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்:

“சிஎஸ்கே அணிக்கு தினேஷ் கார்த்திக் ஒரு மிகச் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நான் கருதுகிறேன். ஆண்டி பிளவர் போன்ற உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்களின் கீழ் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அவர் . அதேசமயம், அவர் ஒரு ‘தமிழ்நாட்டுப் பையன்’ என்பது மிகவும் முக்கியமான அம்சம். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவு எப்போதுமே சிஎஸ்கே அணிக்கு உள்ளது. எனவே, ஒரு உள்ளூர் நபர் தலைமைப் பொறுப்புக்கு வருவது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும்” என்றார்.

ஆர்சிபியில் தினேஷ் கார்த்திக்

2024-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் மென்டாராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT