கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் - கில்லை முந்தி முதலிடம் பிடித்த பண்ட்

கொழும்பில் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

கொழும்பு,

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். சுப்மன் கில்லை பின்னுக்குத் தள்ளி அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

2-வது டெஸ்ட்

கொழும்பில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

காயத்துக்கு மத்தியில் கம்பேக்

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார வீசிய ஷார்ட்-பிட்ச் பந்து ரிஷப் பண்ட்டின் இடது கையில் பலமாகத் தாக்கியது. இதனால் கடும் வலியால் அவதிப்பட்ட அவர், 15 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ‘ரெட்டையர்ட் ஹர்ட்’ முறையில் களத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், 2-வது நாள் ஆட்டத்தில் சரண்ஷ் ஜெயின் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து பண்ட் மீண்டும் களமிறங்கினார்.

63 ரன்கள் எடுத்த பண்ட்

காயத்துக்கு மத்தியிலும் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட், 63 ரன்கள் சேர்த்தார். துருவ் ஜுரெலுடன் இணைந்து அவர் அமைத்த முக்கியமான பார்ட்னர்ஷிப், இந்திய அணியின் ஸ்கோரை வலுப்படுத்தியது.

அதிக ரன்கள்

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை பண்ட் படைத்தார். 42 டெஸ்ட் போட்டிகளில் 2,948 ரன்கள் குவித்துள்ள அவர், 2,917 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில்லை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 40 போட்டிகளில் 2,716 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 50 போட்டிகளில் 2,675 ரன்களுடனும், விராட் கோலி 46 போட்டிகளில் 2,617 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மழையால் ஆட்டம் நிறுத்தம்

2-வது நாள் ஆட்டத்தின் 2-வது செஷன் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

துருவ் ஜுரெல் 95 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன்கள் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். தற்போது மீண்டும் ஆட்டம் துவங்கி இருக்கிறது.