மொஹாலி,
டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதின. இதில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது முதல் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அர்ஜுன் டெண்டுல்கர், 36 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சில் வந்த கேட்ச் வாய்ப்பை ரிஷப் பந்த் கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடப்பு தொடரின் முதல் போட்டியில் விளையாடிய மகன் அர்ஜுனை சச்சின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
``கிரிக்கெட் ஒருவரது திறமையை எவ்வளவு சோதிக்கிறதோ அதே அளவுக்கு அவரின் பொறுமையையும் சோதிக்கும். இவை அனைத்தையும் நீ அழகாய் கையாண்டாய். இந்த ஐபிஎல் சீசன் முழுவதிலும் நீ நடந்து கொண்ட விதம், உனக்கான வாய்ப்புக்காக நீ கடைசி போட்டி வரை காத்திருந்தாலும் நேர்மறையான மனநிலையுடன் இருந்துள்ளாய். இந்த விளையாட்டின் மீது இப்போது நீ கொண்டிருக்கும் பணிவு மற்றும் காதலுடனும் எப்போதும் பயணிக்க வேண்டும்''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.