கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் அதிரடி சதம்... மும்பைக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சர்ப்ராஸ் கான் 14 ரன்களும், ஷிவம் துபே 5 ரன்களும், டிவால்ட் பிரேவிஸ் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கார்த்திக் சர்மா 18 ரன்களிலும், ஜாமி ஓவர்டான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 101 ரன்களுடனும், அகீல் ஹொசைன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.