லண்டன்
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், 194 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் 27-ந்தேதி தொடங்கியது.
கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. காக்ஸ் (55) மற்றும் விக்கெட் கீப்பர் ஜேமீ ஸ்மித் (61) அரை சதம் விளாசினர். பென் டக்கெட் (17), எமிலியோ (8), கேப்டன் ரூட் (4), ஹாரி புரூக் (15), லாரன்ஸ் (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒல்லி ராபின்சன் டக்-அவுட் ஆனார். ஆர்ச்சர் (14) ரன்களில் வெளியேறினார். ஜோஷ் டங் (1), அட்கின்சன் (34) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முதல் நாளில் இங்கிலாந்து, 56 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகள், முகமது அலி 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தனர்.
தொடர்ந்து 2-வது நாளில் அட்கின்சன் (45) ஆட்டமிழந்ததும் போட்டி முடிவுக்கு வந்தது. ஜோஷ் டங் (30) ஆட்டமிழக்காமல் உள்ளார். 66.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்திருந்தது.
இதனை அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணியில் அஜன் அவைஸ் (46), ஷகீல் (16) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால், 37.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 110 ரன்கள் எடுத்தது. இதனால், இங்கிலாந்து 180 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இதில், பென் டக்கெட் (1), கேப்டன் ரூட் (24), காக்ஸ் (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். எமிலியோ (30), ஹாரி புரூக் (7) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 22 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து 81 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சம் இல்லை என கூறி போட்டி முடித்து கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதனால், 2-ம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து 261 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதனை தொடர்ந்து, 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் எமிலியோ (31), ஹாரி புரூக் (34) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஸ்மித் (7), அட்கின்சன் (7) சொற்ப ரன்களில் வெளியேறினர்.
எனினும், டான் லாரன்ஸ் அரை சதம் அடித்து (50 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அணியை வலுப்படுத்தினார். ஒல்லி ராபின்சனும் (2) ஆட்டமிழக்காமல் இருந்தபோது, 46.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து 177 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, போதிய வெளிச்சம் இல்லை மற்றும் மழை ஆகியவற்றை முன்னிட்டு போட்டி முடித்து கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதனால், 3-ம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து 357 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 3 விக்கெட்டுகள், குர்ரம் ஷாசாத் மற்றும் முகமது அலி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
இதனை தொடர்ந்து 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், பாகிஸ்தான் வெற்றி பெற 389 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது.
அப்போது மழை குறுக்கிட்டு, ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதன்பின்னர் விளையாடிய, பாகிஸ்தான் அணியில் சவுத் ஷகீல் (97), ஷான் மசூத் (26), அலி உஸ்மான் (16), முகமது அப்பாஸ் (13) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் மளமளவென ஆட்டமிழந்தனர்.
இதனால், 50.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 194 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 194 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றி உள்ளது.