மும்பை,
நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகியதிலிருந்து பல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வந்த ஒரு கருத்தை, அதாவது அந்த மாபெரும் பேட்டிங் வீரர் ஓய்வு பெற வேண்டிய காலத்திற்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டார் என்ற கருத்தை, முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவும் எதிரொலித்துள்ளார்.
கோலியின் அதிர்ச்சியான முடிவை மீண்டும் நினைவு கூர்ந்த கபில் தேவ், முன்னாள் இந்திய கேப்டனிடம் இன்னும் நிறைய டெஸ்ட் கிரிக்கெட் மீதம் உள்ளது என்றும், களத்தில் அவரது ஆக்ரோஷமான ஆளுமையை டென்னிஸ் ஜாம்பவான் ஜான் மெக்கென்ரோவுடன் ஒப்பிடுவதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இது 10 ஆயிரம் ரன்கள் அல்லது மைல்கற்கள் பற்றியது அல்ல. அவர் ஆறு மாதங்கள் கோபப்படாமல் அமைதியாக இருந்திருந்தால், மீண்டும் இந்திய அணிக்காக விளையாடியிருக்க கூடும். தேர்வுக்குழுவினர் அல்லது கேப்டன் அவரை தேர்வு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவர் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு சென்று கடினமாக உழைத்து ரன்கள் குவித்து மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்க வேண்டும்.
அவரிடம் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் திறன் இருக்கிறது. விராட் கோலியை பார்க்கும் போது எனக்கு ஜான் மெக்கென்ரோவின் நினைவுதான் வருகிறது. அவர் களத்தில் சண்டையிட்டு விளையாடினால் மட்டுமே அவரது சிறந்த ஆட்டம் வெளிப்படும். சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற அமைதியான வீரர்களில் இருந்து கோலி வேறுபட்டவர்.. பாகிஸ்தானின் ஜாவித் மியான்டட் போன்ற ஆக்ரோஷமான குணம் கொண்டவர்
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் விராட் கோலி தனது 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 40 வெற்றிகளை பெற்றுத் தந்து, இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டனாகவும் விளங்கியுள்ளார்.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.