நியூசண்டிகார்,
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் தற்போது தொடங்கி உள்ள வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால்-சூர்யவன்ஷி களமிறங்கினர்.
ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி, 16 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் அவர் சிதறடித்தார். பேட் கம்மின்ஸ் வீசிய 3-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.
மேலும், ஒரு ஐ.பி.எல். சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை(59 சிக்ஸர்கள்) சூர்யவன்ஷி இன்று முறியடித்துள்ளார். தற்போது வரை அவர் 61 சிக்ஸர்களை அடித்துள்ளார். சூர்யவன்ஷியின் அதிரடியால் ராஜஸ்தான் அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.