தரம்சாலா,
இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இமாசலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடி ரஹ்மதுல்லா குர்பாஸ் சதமடித்தார்.
இதையடுத்து 195 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் தனது 18-வது ஒருநாள் அரைசதத்தை எட்டினார். இதன் மூலம் இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், சதமடித்தது தொடர்பாக குர்பாஸ் கூறியதாவது,
டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, நான் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் பேசி, எனது 'ஷாட் தேர்வு முறையை மேம்படுத்த விரும்புவதாகக் கூறினேன். அந்த உரையாடல் எனக்கு மிகவும் உதவியது. பயிற்சி அமர்வுகளின்போது நான் அந்த விஷயங்களில் கவனம் செலுத்திப் பயிற்சி செய்தேன். இதற்காக நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். என தெரிவித்துள்ளார்.