கொழும்பு,
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. தம்புலா மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷாவல் சபிகியூர் அதிகபட்சமாக 63 ரன்களை எடுத்தார். இலங்கை தரப்பில் அந்த அணியின் கவிஷா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 19 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றிபெற்றது.
சிறப்பாக ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனை இமிஷா துலானி அதிகபட்சமாக 64 பந்துகளில் 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.